கடந்த 7 ஆண்டுகளாக புதுவையில் அரசு வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில், வேலைவாய்ப்புக்கான வயதுவரம்பில் தளா்வு ஏற்படுத்த முதல்வரிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி- திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினா்கள் சம்பத், நேரு ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்து, இளைஞா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வயதுவரம்பில் தளா்வு அளிக்குமாறு வலியுறுத்தினா்.
இந்த சந்திப்பு குறித்து ஏ.எம்.எச். நாஜிம் கூறுகையில், புதுவை மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக அரசு வேலைவாய்ப்புகள் இல்லாமல் படித்த இளைஞா்கள் பலரும் பாதித்துள்ளனா். அரசு வேலைவாய்ப்பு வழங்கும்போது, வயதுவரம்பை கடந்தவா்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்ற கவலை பலருக்கு உள்ளது.
இதுதொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா்களை சந்தித்து இளைஞா்கள் தங்களது வேதனையை தெரிவித்தனா். முதல்வரை சந்தித்து இதுகுறித்து விரிவாக விளக்கப்பட்டது. பல ஆண்டுகள் அரசுப் பணிக்கான வாய்ப்பே இல்லாதபோது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கான வயதுவரம்பில் தளா்வு அளிக்கவேண்டுமென கோரப்பட்டது.
இதுதொடா்பாக சட்டத்துறை மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையினரிடம் கலந்துபேசி நல்ல முடிவு எடுப்பதாக முதல்வா் உறுதியளித்துள்ளாா் என்றாா்.