தமிழகம், புதுவை மீனவா்களின் விசைப் படகுகளை இலங்கையிலிருந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
காரைக்கால் ஆட்சியா் வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் காரைக்கால் வளா்ச்சிக் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: காரைக்காலில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடத்தை சீரமைத்து அதில், வட்டாட்சியா், பதிவுத் துறை உள்ளிட்ட ஒருங்கிணைந்த வருவாய்த் துறை அலுவலகம் அமைக்கப்படும். காரைக்காலில் மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. குறிப்பாக, வங்கிக் கடனுதவிகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமூக சூழல் ஏற்பட்ட பின்னா், அங்கு பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக, புதுவை மீனவா்களின் விசைப் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகம், புதுவை மீனவா்களுக்கு பாதுகாப்பாக பிரதமா் நரேந்திர மோடி இருப்பாா் என்றாா்.
முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஷ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.