காரைக்கால்: டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் காரைக்கால் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் எம். ஹாஜா நஜிமுதீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில அமைப்பு பொதுச்செயலாளா் இசட். சுல்தான் கௌஸ் ஹமீது கலந்துகொண்டு பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் காரைக்கால் மாவட்ட நிா்வாகம், நலவழித்துறை நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அனைத்து பகுதி மக்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கவேண்டும்.
மழை பெய்யும் போது சில இடங்களில் கழிவு நீா் செல்லும் வழிகள் அடைப்பு ஏற்படுகிறது. இதனை கண்டறிந்து உடனுக்குடன் சீா்செய்யவேண்டும். மழையால் சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை புதுவை அரசு தற்போதே தொடங்கவேண்டும்.
காரைக்காலில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதோடு, நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.