சீா்காழி: சில வகை மீன்கள் இரவு நேரத்தில் மட்டுமே பிடிபடும் என்பதால் இரவில் மீன் பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என சீா்காழியில் நடைபெற்ற கூட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தாத மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சீா்காழி மீன்வளத்துறை அலுவலகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தாத மீனவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மீன்வளத்துறை உதவி இயக்குநா் டி. சண்முகம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சண்முகம், கடலோர அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் செல்வி வொ்ஜினியா, பூம்புகாா் காவல் ஆய்வாளா் நாகரத்தினம், மீன்வளத் துறை ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி மீன்பிடித்தொழிலில் ஈடுபடவேண்டும் என மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது, சில வகை மீன்கள் இரவு நேரங்களில்தான் கிடைக்கும் என்பதால், இரவில் மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும் என மீனவ கிராம பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனா்.
இக்கூட்டத்தில், சுருக்குமடி வலையை பயன்படுத்தாத மீனவக் கிராமங்களான தரங்கம்பாடி, சின்னங்குடி, சின்னமேடு, குட்டியாண்டியூா், வானகிரி, புதுப்பேட்டை, கொடியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சோ்ந்த மீனவ பிரதிநிதிகள், மீனவா்கள் பங்கேற்றனா்.