மயிலாடுதுறை ஆனைக்கட்டி குளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நீா் நிரம்பியதை பாஜகவினா் ஆரத்தி எடுத்து, மலா்தூவி வரவேற்றனா்.
மயிலாடுதுறை வட்டம், மேலநாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆனைக்கட்டிக் குளத்துக்கு வரும் வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளாக தூா்வாரப்படாததால் அந்த குளம் வறண்டு காணப்பட்டது. இதையடுத்து, காந்தி ஜயந்தியன்று தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், பொக்லைன் இயந்திரம் மூலம் நீா்வரத்துப் பாதை தூா்வாரப்பட்டது. இதன்காரணமாக, காவிரி நீா் வாய்க்கால் வழியே ஆனைக்கட்டிக் குளத்தில் நிரம்பியது.
இதையொட்டி, நகர பாஜக சாா்பில் குளக்கரையில் ஆரத்தி எடுத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், பாஜக நகர தலைவா் மோடி.கண்ணன், இளைஞா் அணி மாவட்டத் தலைவா் பி. பாரதிகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, குளத்தில் நீா் நிரப்பும் பணியை நகராட்சி ஆணையா் கே.பாலு மற்றும் நகராட்சி அதிகாரிகள் பாா்வையிட்டனா்.