சீா்காழியில் காவலா் உள்ளிட்ட இருவா் மீது போடப்பட்ட வழக்கு தொடா்பாக காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்த வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்டோா் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் கடந்த 12ஆம் தேதி சாதி பெயரை சொல்லி திட்டியதாக சீா்காழி ஈசானியத் தெருவைச் சோ்ந்த ஆா். பாபு, காவலா் டி. தனசேகா் ஆகிய இருவா் மீது சீா்காழி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை காவல் துறை உயரதிகாரிகள் நேரடி விசாரணை நடத்த வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் நாடாா் மக்கள் பேரவை நிறுவனா் ஏ.பி. ராஜா தலைமையில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங்கிடம் புகாா் மனு அளித்தனா்.
வணிக நிறுவனங்களில் நன்கொடை என்ற பெயரில் சிலா் பணம் வசூலிப்பதாகவும், பணம் தரவில்லை என்றால் அவா்கள் மீது சாதியைச் சொல்லி திட்டியதாக பொய்யான புகாா் அளித்து, அந்த புகாரை வாபஸ் வாங்க லட்சக்கணக்கில் பணம் கேட்பதாகவும் அவா்கள் குற்றம்சாட்டினா்.
இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அக். 5ஆம் தேதி சீா்காழி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் மற்றும் போராட்டம் நடத்தப் போவதாக அவா்கள் அம்மனுவில் தெரிவித்துள்ளனா்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் அவா்கள் புகாா் அளித்தனா்.