காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் திங்கள்கிழமை கூறியது:
காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனா். அறுவடைக்கு முன்பாக இந்திய உணவுக் கழகம் மற்றும் புதுவை அரசு நிறுவனம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவேண்டுமென முதல்வா், வேளாண் அமைச்சரை விவசாயிகள் சங்கத்தினா் சந்தித்து வலியுறுத்தினா்.
ஆனால், அரசு சாா்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையான 60 கிலோ மூட்டை ரூ. 1190 என்ற நிலையில், தனியாரிடம் ரூ. 810-க்கு விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு புதுவை அரசின் செயல்பாடுகள்தான் காரணம்.
எங்களது கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் மீண்டும் கடன் பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவில்லை. தற்போது காரைக்காலில் சம்பா பருவத்துக்கான நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஒரு வாரத்துக்குப் பின் நடவுப் பணிகள் தீவிரமாகும். கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துத்தந்தால்தான் விவசாயிகள் பயனடையமுடியும்.
கொள்முதல் நிலையம் திறப்பு விவகாரத்தில் தற்போதைய அலட்சிய நிலையே நீடித்தால், சம்பா சாகுபடியாளா்களும் சில மாதங்களில் பெரும் இழப்பை சந்திப்பை சந்திக்க நேரிடும். எனவே, புதுவை அரசு இந்த பிரச்னைக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.