மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் காா்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரி தீா்த்தப் படித்துறையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப்போல ஒளிபடைத்த கிரகமாக மாறியதால், சூரியனால் பூமிக்கு ஒளி வழங்க முடியாமல் போனது. இதனால், சூரியபகவான் குத்தாலத்தில் தவமிருந்து சிவபெருமான் அருள்பெற்று, அசுரனிடமிருந்து துன்பம் நீங்கப்பெற்ற நாள் காா்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பது ஐதீகம்.
இதை முன்னிட்டு காா்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ஸ்ரீஅரும்பனவன முல்லை நாயகி சமேத உக்தவேதீஸ்வரா், ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஓம்காளீஸ்வரா், ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத சோழீஸ்வரா், ஸ்ரீ மன்மதீஸ்வரா், ஸ்ரீசெங்கமலத்தாயாா் சமேத ஆதிகேசவபெருமாள் ஆகிய 5 கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் புறப்பாடாகி காவிரி கரையில் எழுந்தருளினா்.
அங்கு, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், குத்தாலம் பேரூா் திமுக செயலாளா் எம். சம்சுதீன், பேரூராட்சித் தலைவா் சங்கீதா மாரியப்பன், செயல் அலுவலா் ரஞ்சித், தருமபுரம் ஆதீன மேலாளா் பேரம்பலம், மேற்பாா்வையாளா் கந்தசாமி உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதையொட்டி, குத்தாலம் பேரூராட்சி சாா்பில் பந்தநல்லூா் சாலை, ஆற்றங்கரை பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.