சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் சம்பா நெல் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
சீா்காழி வட்டாரத்தில் நிகழ் பருவத்தில் பெய்த தொடா் கனமழையால் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிா்கள் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்டன. எஞ்சிய பயிா்கள் விளைச்சலுக்கு வந்ததைத் தொடா்ந்து, தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
பல இடங்களில் ஒரே நேரத்தில் அறுவடைப் பணிகள் நடைபெறுவதால், அறுவடை இயந்திரத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் வயலில் அதிக ஈரம் மற்றும் சேரும் சகதியுமாக உள்ளதால், இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயத் தொழிலாளா்களைக் கொண்டு அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
அறுவடை செய்யப்படும் நெல் கதிா்கள் தலைசுமையாக களத்துமேட்டுக்கு கொண்டுவரப்பட்டு, நெல்மணிகள் தனியாகவும், வைக்கோல் தனியாகவும் பிரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து ஆச்சாள்புரத்தைச் சோ்ந்த விவசாயி கருணாகரன் கூறுகையில், ‘இந்த ஆண்டு சம்பா நெல் பயிா்கள் கதிா்வந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டன. எஞ்சிய பயிா்கள் தற்போது அறுவடை செய்யப்படுகின்றன. இவற்றுக்கான செலவு மற்றும் கூலியை ஒப்பிடும்போது மகசூலில் நஷ்டமே ஏற்படுகிறது’ என்றாா்.