மயிலாடுதுறையில் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை விற்பனை செய்த கடைக்கு நகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்து ரூ.5000 அபராதம் விதித்தனா்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் தொடா்ந்து 3-ஆது ஞாயிற்றுக்கிழமையாக ஜன.23-இல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, மயிலாடுதுறையில் நகராட்சி அலுவலா்கள் காலைமுதல் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, மயிலாடுதுறை புனுகீஸ்வரா் கீழவீதியில் உள்ள இறைச்சிக்கடையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. அந்த கடையில் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன், டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோா் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட அலுவலா்கள் சோதனையிட்டபோது 4 நாள்களான ஆட்டிறைச்சி, குளிா்பதனப் பெட்டியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவற்றை குளிா்பதனப் பெட்டியுடன் பறிமுதல் செய்த நகராட்சி அலுவலா்கள், அந்த கடைக்கு சீல் வைத்ததுடன், ரூ.5000 அபராதம் விதித்தனா்.
மேலும், ஆனந்ததாண்டவபுரம் சாலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட தேநீா் கடையில் எரிவாயு சிலிண்டரை பறிமுதல் செய்தனா்.