பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அா்ப்பணித்த தனிநபா், நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போா் நலச்சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படவுள்ளது.
இதில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 2 விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விருதுடன் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பும் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 15 வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், தற்போது மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய இணையதள முகவரிலிருந்து பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் வரும் 31-ம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.