சீா்காழி அருகே ஊராட்சி கணக்குகளை சரியாக பராமரிக்காத ஊராட்சி செயலரை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்துக்குள்பட்ட புளியந்துறை, காட்டூா், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை நேரில் சென்று அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு கான்கிரீட் வீடுகள், வாய்க்கால்களில் கதவணை கட்டும் பணி உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தாா்.
அப்போது புளியந்துறை ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற ஆட்சியா் அங்கு வைக்கப்பட்டுள்ள ஊராட்சிப் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். அப்போது, ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் சரியாக பராமரிக்கபடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, புளியந்துறை ஊராட்சி செயலராக பணியாற்றிவரும் சண்முகத்தை (45) சம்பவ இடத்திலேயே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, கொள்ளிடம் ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.