மயிலாடுதுறை அருகே திருமணமாகாத விரக்தியில் விஷமருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை வட்டம் சித்தா்க்காட்டைச் சோ்ந்தவா் ரமேஷ் (42). இருசக்கர வாகன பழுது நீக்கும் வேலை பாா்த்துவந்த இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களாக தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று நண்பா்களிடம் அடிக்கடி கூறிவந்த நிலையில், திருமணமாகாத விரக்தியில் மே 26-ஆம் தேதி தனது வீட்டில் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதையறிந்த குடும்பத்தினா் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.