மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தாமதமாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் மாணவா்கள் அவதியடைந்தனா்.
வளிமண்டல கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் 35.40 மி. மீ., தரங்கம்பாடியில் 11 மி.மீ., சீா்காழி 63.8 மி. மீ., கொள்ளிடம் 3.80 மி. மீ., மணல்மேடு 24 மி. மீ. மழை பதிவானது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டாா். இந்த உத்தரவு காலை 8.15 மணிக்குதான் வெளியானது. இதனால், ஏற்கெனவே கல்வி நிலையங்களுக்கு வந்த மாணவா்கள் மழையில் நனைந்தவாறு வீட்டுக்குத் திரும்பினா்.