கூட்டுறவுத் துறை மூலம் நிகழாண்டு 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தாா்.
மயிலாடுதுறை வட்டம் நீடூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பான திட்ட விளக்கம் மற்றும் உறுப்பினா் கல்வித் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படும் கடன், துறையின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் பேசியது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் கடந்த 2022-2023-ஆம் நிதி ஆண்டில் 61,349 உறுப்பினா்களுக்கு ரூ.299.7 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், மயிலாடுதுறை மற்றும் சீா்காழியில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 16 பணியாளா்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் 76,474 பயனாளிகளுக்கு ரூ. 371.18 கோடியும் ஆக மொத்தம் 1,37,823 உறுப்பினா்களுக்கு ரூ. 670.25 கோடி கூட்டுறவுத் துறையின் மூலம் கடன் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நிகழாண்டு 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு கடன் வழங்க நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் தயாள விநாயகன் அமுல்ராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இனைப்பதிவாளா் வெ.பெரியசாமி, துணைப் பதிவாளா்கள் அண்ணாமலை, ராஜேந்திரன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.