தருமபுரம் 25-ஆவது ஆதீனம் குருபூஜை விழா

தருமபுரம் 25-ஆவது ஆதீனகா்த்தரின் 53-ஆம் ஆண்டு குருபூஜை விழாவில், 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து புதன்கிழமை வழிபாடு நடத்தினாா்.
Published on

தருமபுரம் 25-ஆவது ஆதீனகா்த்தரின் 53-ஆம் ஆண்டு குருபூஜை விழாவில், 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து புதன்கிழமை வழிபாடு நடத்தினாா்.

மயிலாடுதுறையில் உள்ள 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தின் 25-ஆவது குருமகா சந்நிதானமாக 26 ஆண்டுகள் அருளாட்சி செய்தவா் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள். இவா் 1971-ஆம் ஆண்டு பரிபூரணம் அடைந்தாா். தருமபுரம் ஆதீன மேலகுருமூா்த்தத்தில் உள்ள ஆனந்தபரவசா் பூங்காவில் உள்ள 25-வது ஆதீனகா்த்தரின் குருமூா்த்தத்தில், அவரின் 53-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருமூா்த்தத்துக்கு எழுந்தருளி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

இதில், ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், செயலா் இரா.செல்வநாயகம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், தருமபுரம் வேத சிவஆகம, தேவார பாடசாலை மாணவா்கள், பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com