ரத்த தானம் அளிக்கும் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும்: ஆட்சியர்

ரத்த தானம் அளிக்கும் ஆர்வத்தை இளைஞர்களிடம்  மேலும் மேம்படுத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் கூறினார்.
Published on
Updated on
1 min read

ரத்த தானம் அளிக்கும் ஆர்வத்தை இளைஞர்களிடம்  மேலும் மேம்படுத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் கூறினார்.
உலக ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி, நாகையில் புதன்கிழமை நடைபெற்ற தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்துத் தொடங்கி வைத்த ஆட்சியர் மேலும்
பேசியது:
தொடர் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 75 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டும்,  மருத்துவமனைகள் மூலம் தன்னார்வலர்களிடமிருந்தும் ரத்த தானம்
பெறப்பட்டுள்ளன.
ரத்தக் கொடை அளிக்கும் தன்னார்வலர்களும், அவர்களின் குடும்பத்தாரும் பாராட்டுக்குரியவர்கள். உயிர் காக்கும், ரத்த தானம் அளிப்பது குறித்த ஆர்வத்தை இளைஞர்களிடம் மேலும் அதிகரிக்கச்  செய்ய அனைவரும் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் ஆட்சியர்
எஸ். சுரேஷ்குமார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், குடும்ப நலப் பணிகள் இணை இயக்குநர் எம்.ஏ. காதர், சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர் அண்ணாமலை வடிவு, காசநோய் பிரிவு துணை இயக்குநர் முருகப்பன், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் அருண்பதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்பேரணியில், இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச்  சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஊழியர்கள், ரத்த தான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்.
நாகை அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து தொடங்கிய இப்பேரணி, அண்ணா சிலை, காந்தி சிலை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகள் வழியே மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com