நாகை மாவட்டம், குத்தாலம் அருகே சுவர் இடிந்து விழுந்து தாய், தந்தை, மகள் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை மாரியம்மன் கோயில் செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (39). ஃபிட்டராக வேலை செய்துவந்தார். இவரது மனைவி கார்த்திகா (34). இவர்களுக்கு வர்ஷினி (11), சாதித்யா (7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வர்ஷினி 7-ஆம் வகுப்பும், சாதித்யா மூன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், வெங்கட்ராமன் தனது வீட்டை விரிவாக்கம் செய்துவந்தார். இதற்காக புதிய சுவர் கட்டப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் பழைய சுவர் இடிந்து விழுந்தது.
இதில் வெங்கட்ராமன், கார்த்திகா, சாதித்யா ஆகிய மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர். வர்ஷினி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார். அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் குத்தாலம் வட்டாட்சியர் திருமாறன் மற்றும் போலீஸார் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலறிந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பவுன்ராஜ்(பூம்புகார்), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை) ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் வர்ஷினி மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.