நாகை மாவட்டம், பொறையாறு சங்கரன்பந்தல் இலுப்பூர் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. திருவிளையாட்டம், மேமாத்தூர், நல்லாடை, வேலம்புதுக்குடி, திருவிடைக்கழி, பெரம்பூர், ஆயப்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைப் பெற்று செல்கின்றன்ர்.
இங்கு 3 மருத்துவர்களும், 4 செவிலியர்களும் பணியில் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முற்றிலும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு மேற்கூரைக் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்துள்ளன. இதனால், அசம்பாவித சம்பங்களை தவிர்க்கும் வகையில், இக்கட்டடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளுக்கு அருகில் உள்ள சித்த மருத்துவ கட்டடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயினும், இந்தக் கட்டிடத்தில் போதுமான அளவு இடவசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதனால், மயிலாடுதுறை, காரைக்கால் அல்லது தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே உடனடியாக பழுதடைந்தக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.