மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது, வாக்குறுதியளித்தப்படி சிறுபான்மையினருக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மயிலாடுதுறை வட்டம் நீடூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் நாகை வடக்கு மாவட்டத் தலைவர் எம். பஹ்ருதீன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜி.வி. இம்ரான், மாநில நிர்வாகி காஞ்சி இப்ராஹீம் ஆகியோர் கோரிக்கை குறித்துப் பேசினர்.
தீர்மானங்கள்: 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள திருக்குர்-ஆன் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற பாடுபடுவது. சட்டப் பேரவை தேர்தலின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையினருக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதியளித்ததை தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நிறைவேற்ற வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி ஆஷிபாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஏப்.20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.