நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில், நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 322 மாணவிகள் உள்பட 363 பேருக்கு தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பி. முருகன் முன்னிலை வகித்தார். தமிழகக் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் மாணவர்களுக்குப் பட்டம் வழங்கிப் பேசியது:
இந்தக் கல்லூரியில் மாணவர்களை விட 80 சதவீதத்துக்கும் மேலான மாணவிகள் பட்டம் பெறுவது பெருமையாக இருக்கிறது. மாணவர்கள் பட்டங்களைப் பெறுவதோடு, தனித்திறனையும் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம். அதிர்ஷ்டம் என்பது மூடநம்பிக்கை. தன்னம்பிக்கையுடன் கூடிய கடின உழைப்பு மட்டுமே பயன்தரும் என்றார்.
ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையைக் கூர்மையாக்கினால் வெற்றியின் உச்சத்தை எட்டலாம் என்றார்.
விழாவில், துறைத் தலைவர்கள் பாரதிஸ்ரீ, ச. சுந்தரம், வி. தீனதயாளன், க. இளங்கோவன், அ. தாமரைச்செல்வி, எஸ். தியகராஜன் மற்றும் பேராசிரியர்கள் பிரபாகரன், ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.