மழை நீர் தேங்கிய வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு: ஆட்சியர் அறிவுறுத்தல்
நாகை மாவட்டத்தின் கல்வி நிலை மேம்பட்டு, மாநில அளவில் முதன்மைப் பெற ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
நாகை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவில், மேலும் அவர் பேசியது:
மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் நாகை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் கல்வி நிலையும், தேர்ச்சி வீதமும் வருங்காலங்களில் மேம்பட்டு, மாநில அளவிலான முதல் மூன்று இடங்களில் இடம் பெற ஆசிரியர்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கற்பித்து, பன்முகத் திறன் கொண்டவர்களாக உருவாக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 5 பள்ளிகளுக்கும் விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், தூய்மை இந்தியா- தூய்மை பள்ளித் திட்டத்தின் கீழ் மாநில அளவில் விருது பெற்ற 2 பள்ளிகளுக்கும், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 6 பள்ளிகளுக்கும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 39 பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றுகள், ஊக்கத் தொகை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. அமுதா, மாவட்டக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.