கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்குப் பதிலாக, சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு வரும் ஆண்டு முதல் செல்லவுள்ளதாக ஐயப்ப பக்தர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சீர்காழியைச் சேர்ந்த சபரிகிரி ஐயப்பா சேவா சங்கத்தின் தலைவரும், 43ஆண்டுகளாக சபரிமலை யாத்திரை சென்றுள்ள ஐயப்ப குருசாமியுமான அமர்நாத் சுவாமிகள் வெளியிட்ட அறிக்கை:
சீர்காழியிலிருந்து தனது தலைமையில் கடந்த 43ஆண்டுகளாக 120 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை சென்று, ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறோம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 48 நாள்கள் ஆச்சாரமாகவும் கடுமையாகவும் விரத முறையைக் கடைப்பிடிப்போம்.
தற்போது, உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சபரிமலையில் காலம், காலமாக நடைபெற்று வரும் பூஜை புனஸ்காரங்களுக்கு எதிராக உள்ளது. பெண்கள் 48 நாள்கள் விரதம் இருந்து, சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட இயற்கையாகவே அவர்களது உடலமைப்பு ஒத்துழைக்காது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஐயப்ப பக்தர்கள் மனவருத்தம் அடைந்துள்ளோம். ஆகையால், நிகழாண்டு முதல் சபரிமலைக்கு செல்வதற்குப் பதிலாக சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளோம்.