நாகை, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டப்படிப்புக்கான சேர்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பாடப்பிரிவில் (பகுதி நேர) முனைவர் பட்டப்படிப்பு நிகழ் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ள உதவிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சித் திட்டத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி, இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முனைவர் பட்டப்படிப்புக்குத் தேர்வுப் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கைக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி, மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தலைமை வகித்து, முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வு பெற்ற 5 மாணவர்களுக்கு முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக் கடிதத்தை வழங்கினார்.
இந்தப் பட்டப்படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இம்மாத இறுதியில் நடைபெறும் எனவும், நவ. 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.