திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தனிசன்னிதியில் கோயில் கொண்டுள்ள அகோரமுர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை பூரநட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவெண்காட்டில் உள்ள பிரம்மவித்யாம்பாள் உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமுர்த்தியாக தனி சன்னிதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இவரின் திருமேனியின் கீழ் அஷ்ட (எட்டு) பைரவர்கள் இருப்பது விஷேமான ஒன்றாகும். இவரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் பல்வேறு தோஷங்கள் நீங்குவதாகவும், உடல் ஆரோக்கியம், செல்வ செழிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கிடைப்பதாக ஐதீகம்.
அகோரமூர்த்தி மாசிமாத பூரநட்சத்திரத்தில் தோன்றினார். இதையடுத்து, உத்ஸவர் அகோரமுர்த்திக்கு மாதந்தோறும் பூர நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை மாலை ஆவணிமாத பூரநட்சத்திரத்தையொட்டி, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.