வேதாரண்யம் அருகே கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த பொது கிணற்றை கிராம இளைஞர்கள் திங்கள்கிழமை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
தேத்தாக்குடி தெற்கு, செட்டித்தெரு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட பொது குடிநீர் கிணறு உள்ளது.
இக்கிணற்றை அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 250 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இக்கிணறு கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது. இப்பகுதியில் மழை பொய்த்துப்போனதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து நீர் நிலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், பயன்படாத கிணற்றை இப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ், முருகானந்தம், பாஸ்கர், ராஜா, கருணாநிதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிணற்றை தூய்மைப்படுத்தி, தூர்வாரி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இளைஞர்கள் மேற்கொண்ட சமூகப் பணியை சமூக ஆர்வலர் பி. சண்முகம் உள்ளிட்டோர் பாராட்டினர்.