மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு, சீர்காழி விவேகானந்தா கல்விக் குழுமம் சார்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக உணவு, உடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் என சுமார் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத் தொகை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரைவோலையாக கேரள நிவாரண நிதிக்காக சீர்காழி எம்எல்ஏ பி.வி. பாரதியிடம் வழங்கப்பட்டது.
நிவாரணப் பொருள்களை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிகழ்ச்சியில், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குநர் பிரவீன், குட் சமாரிட்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயக்குநர் அலெக்ஸ், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா தாமோதரன், மேலாளர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.