பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகம், பண்டாரவாடை, கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன்(35). இவர் மீது நாகை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டக் காவல் நிலையங்களில் பல்வேறு கொலை வழக்குகள், வெடிகுண்டு வீசிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் அளித்த பரிந்துரையின் பேரில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய கலைவாணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையிலடைக்க நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கலைவாணனை குண்டர் சட்டத்தின் கீழ் பெரம்பூர் போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனர்.