நாகை மாவட்ட திருக்கோயில்களில் காலியாக உள்ள இரவு பாதுகாப்புப் பணிக்குத் தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில், 54 கோயில்களில் இரவு பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 58 வயதுக்குள்பட்ட, நல்ல திடகாத்திரமான உடல் நிலை கொண்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், நாகை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.