நாகை, அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் செடில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சமுத்திரராஜ வழிபாடு புதன்கிழமை (செப். 12) நடைபெறுகிறது.
அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் செடில் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டின் செடில் திருவிழா செப். 6-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் அம்பாள் பிராகாரப் புறப்பாடும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
செடில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சமுத்திரராஜ (வங்கக் கடல்) வழிபாடு புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, காலையில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கடஸ்தாபனமும் நடைபெறுகிறது.
பின்னர், கோயிலிலிருந்து அக்கரைப்பேட்டை கடற்கரைக்கு கடம் புறப்பாடு நடைபெறுகிறது. காலை சுமார் 9.30 மணி அளவில், அக்கரைப்பேட்டை கடற்கரையில் சமுத்திரராஜ வழிபாடாக, பால் மற்றும் பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களை கடலுக்கு சமர்ப்பிக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.