நாகை மாவட்டம், சீர்காழியில் புதிதாக கட்டப்பட்ட சிறு பாலத்தின் வழியாக போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சீர்காழி பழைய பேருந்து நிலைய பகுதியில், தேர் வடக்கு வீதி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகே மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பது வழக்கம். இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து, மழைநீர் எளிதாக வடிகாலுக்குச் சென்றடையும் வகையில், மேல மடவிளாகம் சாலையின் முகப்பில் குறுக்கே ரூ. 6 லட்சம் செலவில், பாக்ஸ் கல்வெட்டு எனப்படும் சிறு பாலம் கட்டும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் நீண்ட தூரத்துக்கு சுற்றிக்கொண்டு செல்ல நேர்ந்தது. இந்நிலையில், பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, அதன்மீது தற்காலிகக் கப்பிகற்கள் சாலை அமைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இங்கு தார்ச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.