உரச் செலவை குறைக்கவும், மண்ணின் தன்மை அறிந்து வேளாண் பணிகளை மேற்கொள்ளவும் விவசாயிகள், மண்வள அட்டையைப் பெற முனைப்பு காட்ட வேண்டும் என நாகை வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) புஷ்பகலா தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்படும் மண்வளப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 10 ஹெக்டேருக்கு ஒரு மண்மாதிரி என்ற வகையில், மண் ஆய்வு செய்யப்பட்டு, மண் வளத்துக்கேற்ற உரப் பரிந்துரை, தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைகளைக் குறிப்பிட்டு, விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், நாகையை அடுத்த பாலையூர் கிராமத்தில் அண்மையில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
நாகை வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) புஷ்பகலா தலைமை வகித்துப் பேசுகையில், உரச் செலவைக் கட்டுப்படுத்தவும், மண்ணின் தன்மை அறிந்து வேளாண் பணிகளை மேற்கொள்ளவும் மண்வள ஆய்வு அவசியமாகிறது. வரும் காலங்களில், மண்வள அட்டை பரிந்துரைப்படி மட்டுமே விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படவுள்ளது என்பதால் விவசாயிகள், மண்வள அட்டையைப் பெற முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
உதவி வேளாண்மை அலுவலர் ராசகுமார், அலுவலர் சத்யா ஆகியோர் பேசினர். விவசாயிகள், வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.