புதிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் விநாயகர் சிலை ஊர்வலங்களில், உயர்நீதிமன்ற வழிகாட்டல் நெறிமுறைகளை உரிய வகையில் கடைப்பிடிக்க வேண்டும் என, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் தெரிவித்தார்.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஆகியவற்றுக்கான விதிமுறைகள் விளக்க சிறப்புக் கூட்டம், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் தலைமை வகித்துப் பேசுகையில், "விநாயகர் சதுர்த்தியையொட்டி, செப். 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. இந்த ஊர்வலங்களின் போதும், புதிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையின் போதும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள வழிகாட்டல் நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்' என்றார்.
மேலும், சிலைகள் பாதுகாப்பு மற்றும் ஊர்வலப் பாதைகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களைக் கடக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் விழாக் குழுவினர் முழுமையாகக் பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியம், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள், விநாயகர் சிலை ஊர்வல குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.