கொள்ளிடம் சாந்த ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், கொள்ளிடம் அக்ராஹாரத்தெருவில் சாந்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கொள்ளிடம் ஊராட்சி அலுவலுகத்துக்கு சொந்தமான இக்கோயில் ஒன்றிய ஆணையரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மிகவும் பழைமையான இக்கோயிலுக்கு 10 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. தற்போது, இந்த நிலம் முழுவதும் விதிக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டு கோயிலுக்கு எவ்வித பயனும் இல்லாமல் இருந்து வருகிறது.
பொதுவாக கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பட்டில் இயங்கி வரும். ஆனால், கொள்ளிடம் சாந்த ஆஞ்சநேயர் கோயில் மட்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலுகத்துக்குச் சொந்தமான இடத்தில் இருந்து வருவதால், ஒன்றிய ஆணையரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கொள்ளிடம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோயிலுக்கென அர்ச்சகர் நியமிக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து குறைந்தபட்ச ஊதியமும் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இக்கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலங்களைஆக்கிரமிப்பிலிருந்து உடனடியாக மீட்கவும் கும்பாபிஷேகத்தை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.