ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மத்திய அரசு ஊழல் செய்ததாகக் கூறியும், அதைக் கண்டித்தும் நாகையில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.
இப்பேரணிக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நாகை மாவட்டத் தலைவர்கள் சி.கே. கனகராஜ் (தெற்கு), எஸ். ராஜகுமார் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய ராணுவத்துக்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில், மத்திய அரசு ஊழல் செய்ததாகக் கூறியும், அதைக் கண்டித்தும் நடைபெற்ற இப்பேரணியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் சி.கே. பெருமாள் தொடங்கி வைத்தார்.
நாகை கோட்டைவாசல் முன்பு தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நிறைவுப் பெற்றது.
பின்னர், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நாகை ஆட்சியரகம் சென்று மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசனிடம் மனு அளித்தனர். இதில் கட்சியின் நகர தலைவர் கே.கே. ரவிச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.