நாகை மாவட்டத்தில் 178 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.16)கரைக்கப்படவுள்ளன. இதற்கான பாதுகாப்புப் பணியில் 200 போலீஸார் உள்பட 303 பேர் ஈடுபடுத்தப்படுவர் என, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாகை மாவட்டத்தில் 520 புதிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகர் சிலைகளின் ஊர்வலம், செப். 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 178 விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ளன. இதில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில், சக்தி விநாயகர் குழு ஒருங்கிணைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 99 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தச் சிலைகள், நாகை அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயிலிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டு, புதிய கடற்கரையில் கரைக்கப்படவுள்ளன. இவைத் தவிர, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 79 விநாயகர் சிலைகள் அந்தந்தப் பகுதிகளில் ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படவுள்ளன.
இவற்றுக்கான பாதுகாப்புப் பணிகளில் நாகை மாவட்ட காவல் துறையினர் 200 பேரும், ஊர்க்காவல் படையினர் 103 பேரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், மாவட்டக் காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.