நாகை புதிய கடற்கரையில் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் செப். 26-ஆம் தேதி நடைபெறும் என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கடற்கரை கால்பந்து போட்டி, கடற்கரை கபடி மற்றும் கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நாகை புதிய கடற்கரையில் செப். 26-ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. ஆடவர் மற்றும் மகளிருக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.
போட்டிகளில் பங்கேற்போருக்கு வயது வரம்பு கிடையாது. கடற்கரை கையுந்துபந்து விளையாட்டு அணிக்குத் தலா 2 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும், கால்பந்து விளையாட்டு அணிக்கு தலா 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும், கபடி போட்டிக்குத் தலா 6 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் அனுமதிக்கப்படுவர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில், முதலிடம் பெறும் அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்குத் தலா ரூ. 500-ம், இரண்டாமிடம் பெறுவோருக்குத் தலா ரூ. 350-ம், மூன்றாமிடம் பெறுவோருக்குத் தலா ரூ. 200-ம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மேலும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுவோர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுக்கு விளையாட்டுச் சீருடை இலவசமாக வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், விளையாட்டுக் கழக அணிகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிகளவில் பங்கேற்குமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.