"இந்தியாவின் சரித்திரத்தை மாற்றப்போகும் தேர்தல்'

17-ஆவது மக்களவைத் தேர்தல்  எதிர்கால இந்தியாவின் சரித்திரத்தை மாற்றப்போகும் தேர்தல் என்று

17-ஆவது மக்களவைத் தேர்தல்  எதிர்கால இந்தியாவின் சரித்திரத்தை மாற்றப்போகும் தேர்தல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா குறிப்பிட்டார்.
நாகை மக்களவைத் தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம். செல்வராசுவுக்கு வாக்குக் கோரி, நாகூரில் வியாழக்கிழமை அவர் பேசியது:
கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய சோதனையைச் சந்தித்துள்ளது. புத்தர், மகாவீர், குருநானக் போன்றோர் வாழ்ந்த இந்த நாட்டில் மதங்கள் பல இருந்தாலும், அனைவரும் சகோதரத்துவத்துடனும், சமூக  நல்லிணக்கத்துடனும் வாழும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் குழு மோதல்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன. பலர் மதத்தின் பெயரால் கொல்லப்பட்டுள்ளனர்.
மகாத்மா காந்தி உள்ளிட்ட எத்தனையோ தலைவர்கள் உயிர்த் தியாகம் செய்து நாம் பெற்ற சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. பன்முகக் கலாசாரங்களைக் கொண்ட இந்தியா தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைமையின்கீழ் இயங்கும் பாஜகவிடம்  சிக்கியுள்ளது. இதை மீட்டெடுக்கவேண்டிய  நிர்ப்பந்தத்தில் நாம் உள்ளோம். இந்திய அரசானது ஒரு மத்தினருக்கானது மட்டும் கிடையாது. அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். யார் எதை சாப்பிடுவது,  எதை உடுத்துவது, வழிபடுவது எல்லாம் அவரவர்களின் உரிமை. அந்த உரிமைக்குப் பங்கம் ஏற்படுத்தும் பாஜக ஆட்சி தொடர்ந்தால், மிகப்பெரிய  பேரழிவை  நாம் சந்திக்க நேரிடும்.  தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக அரசு பாஜகவுக்கு எடுபிடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஓர் அரசியல் கட்சிக்கான எவ்வித தகுதியும் இல்லாமல் செயல்படும் அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்கவேண்டும். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் பாஜகவும், அதிமுகவும் ஆட்சியில் இருக்கக் கூடாது. இந்தியாவின் எதிர்காலம் நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகளில் உள்ளதால் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் எம். செல்வராசுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்றார் அவர். இப்பிரசாரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர்  நாகை மாலி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
மு. கருணாநிதியின் இல்லத்தில்...
திருக்குவளை, ஏப்.12: முன்னதாக, திருக்குவளையில், நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராசுவை ஆதரித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா பிரசாரம் செய்தார்.
திருக்குவளைக்கு வந்த டி. ராஜா,  மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று, அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், திருக்குவளை கடை வீதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்குகள் கோரி பிரசாரம் செய்தார். இதில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் எ. தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயலாளர் மரிய.சார்லஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியினர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com