10 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு டி.டி.வி. தினகரனால் வெற்றி பெற முடியாது என்று மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் குறிப்பிட்டார்.
சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செ. ராமலிங்கத்துக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்து அவர் பேசியது: பிரமதர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஊழல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏழை எளிய மக்கள் வருமானம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், முதல்வர், அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் என சுமார் 150 பேர் மட்டுமே வசதிபடைத்தவர்களாக இருக்கின்றனர். சீர்காழியில் தடுப்பணை கட்டுவது உள்ளிட்ட இதுவரை அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. கருத்துகணிப்பில் கூறியப்படி 10 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு டிடிவி. தினகரனால் தமிழகத்தில் 22 சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றார் ஸ்ரீதர் வாண்டையார். பிரசாரத்தின்போது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், திமுக நகரச் செயலர் சுப்பராயன், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்டச் செயலர் முனிபாலன், நகரச் செயலர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.