தட்டுபாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி திருமருகலில் கிராமமக்கள் காலி குடங்களுக்குடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமருகல் ஊராட்சி, கீழசம்படித்தெரு, மேல சம்படித் தெரு, வெள்ளைத்தெரு ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு மக்களுக்கு கடந்த 2 மாதமாக குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், திங்கள்கிழமை திருமருகல் ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, அங்கு வந்த திருமருகல் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலவர் பாலமுருகன், ஊரக வளர்ச்சித் துறை மேலாளர் முருகானந்தம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.