திருப்பூண்டியில் பாஜக நிர்வாகி உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
திருப்பூண்டியைச் சேர்ந்தவர் ப. செந்தில்குமார் (40). பாஜக அமைப்புச்சாரா தொழிலாளர் அணி நாகை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய செந்தில்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், தலையில் காயங்களுடன் அங்குள்ள ஒரு ஏரியில் செந்தில்குமார் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த கீழையூர் போலீஸார், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது மனைவி உமாராணி அளித்தப் புகாரின் பேரில், கீழையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாலை மறியல்: இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக தஞ்சை கோட்டச் செயலர் டி. வரதராஜன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் நேதாஜி மற்றும் இறந்த செந்தில்குமாரின் உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைஅடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.