சீர்காழி அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 96 மதுப்புட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் வட்டாட்சியர் இந்துமதி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சீர்காழியிலிருந்து தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வாசுதேவன் என்பவர் சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த மூட்டையைச் சோதனை செய்தபோது, அதில் 180 மில்லி அளவு கொண்ட 96 மதுப்புட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, மதுப்புட்டிகளையும், இருசக்கர வாகனத்தையும் சீர்காழி மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கதிராமங்கலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.