நாகை மாவட்டத்தில் வாக்குச் சாவடிப் பணியில் ஈடுபடும் அரசுத் துறை அலுவலர்களை இறுதி சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,511 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி பணிகளில் ஈடுபடும் அரசுத் துறை அலுவலர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் வகையில் இப்பணி நடைபெற்றது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் விஜயகுமார், நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் சி.பி. நேமா, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சீ. சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.
அரசுத் துறை அலுவலர்கள் தற்போது பணியாற்றும் பகுதியில் அல்லாமல் வேறு பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் வகையில் ஏற்கெனவே 2 முறை சுழற்சி அடிப்படையில் அலுவலர்கள் தேர்வு நடைபெற்ற நிலையில், இறுதி சுழற்சி முறை தேர்வாக இப்பணி நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.