சென்னை கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் இயக்குநர் கே. வன்னியபெருமாள் நாகை மாவட்டத்தில் புதன்கிழமை ஆய்வுமேற்கொண்டார்.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில், நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர பாதுகாப்புக் குழும மண்டல அலுவலகம், பிரிவு அலுவலகங்கள், கடற்கரைக் காவல் நிலையங்கள், கடலோர பாதுகாப்புக் குழும சோதனைச் சாவடிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கடற்கரை ரோந்து பணி, ஏடிவி வாகன ரோந்து பணி, நுண்ணறிவுப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை போன்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.
கோடியக்கரையில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஓர் உதவி ஆய்வாளர், 5 காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 24 மணி நேர ரோந்துப் பணிகளிலும் ஈடபட வேண்டும். கடலோர கிராமங்களில் நுண்ணறிவுப் பிரிவினர் கூடுதல் தகவல்களைப் பெற வேண்டும். அந்நியர்களின் ஊடுருவல்கள் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.