சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவத்தின் நிறைவாக முத்துசட்டைநாதர் சுவாமி உத்ஸவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது.
சீர்காழி திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி கோயிலில், கடந்த 10-ஆம் தேதி திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய விழா ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்றது.
பிரமோற்சவத்தின் நிறைவாக முத்துசட்டைநாதர் சுவாமிக்கு 63-ஆவது ஆண்டு சிறப்பு வழிபாடு ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு யதாஸ்தானத்திலிருந்து முத்துசட்டைநாதர் சுவாமி வசந்த மண்டபம் எழுந்தருளுகிறார்.
தொடர்ந்து, விசேஷ ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெறுகின்றன. இரவு 9.30 மணிக்கு முத்துசட்டைநாதர் சுவாமி புஷ்ப விமானத்தில் கோயில் பிராகாரம் வலம் வந்து மீண்டும் யதாஸ்தானம் எழுந்தருளல், புஷ்பாஞ்சலி, சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியன நடைபெறுகின்றன.
பின்னர், மலைமீது உள்ள மூலவர் சட்டைநாதருக்கு புனுகுசாத்தி தீபாராதனை
நடைபெறும்.
இதில் தருமை ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முத்துசட்டைநாதர் பக்தஜனசபா மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.