பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும், கடலூரில் வன்முறை கும்பலால் சேதப்படுத்தப்பட்ட தலித் மக்களின் வீடுகளை புனரமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை வண்டிப்பேட்டை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அறிவழகன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் காசிநாதன், சக்திவேல், ஆல்பர்ட் ராயன், சுரேஷ், முத்துவளவன், வைரமுத்து உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நாகை வண்டிப்பேட்டை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். காவல் துறையினரின் அறிவுறுத்தலின்பேரில், மறியல் கைவிடப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.