நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கிராம மக்களுக்கு கடந்த சில நாள்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்பு இருந்து வரும் நிலையில், 5 சிறுவர்கள் உள்பட 25 பேர் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மருதூர், மறைஞாயநல்லூர் பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட இடங்களில் வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்பு கடந்த சில நாள்களாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மறைஞாயநல்லூரை சேர்ந்த கமலி (6), பானுமதி(70), அகஸ்தியம்பள்ளியைச் சேர்ந்த பேரரசு (2), வேதாரண்யம் பிரியதர்ஷிணி (19), கருப்பம்புலம் வைரக்கண்ணு (70), ஆயக்காரன்புலம் சிவசங்கரி (26) என 5 சிறுவர்கள், 16 பெண்கள் உள்பட 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சுகாதார நிலையங்களிலும் வெளிநோயாளிகளாக சிலர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.