நாகை அருகே நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
நாகையை அடுத்த பாப்பாகோயில் புதியகல்லார் பகுதியைச் சேர்ந்தவர் மா. ராமகிருஷ்ணன் (45). இவர் வெள்ளிக்கிழமை இரவு நாகை- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். பாப்பாகோயில் அருகே சென்றபோது, எதிர்திசையில் வந்த மற்றோர் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், நாகை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இதேபோல், திருப்பூண்டி, காரைநகர் பகுதியைச் சேர்ந்த து. சுந்தரமூர்த்தி (56) வெள்ளிக்கிழமை இரவு காரைநகர் பகுதியில் இ.சி.ஆர். சாலையை கடக்க முற்பட்டபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். மேற்கண்ட நிகழ்வுகள் குறித்து அந்தந்த பகுதி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.