மயிலாடுதுறை கோட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு மயிலாடுதுறையை உடனடியாக தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை சுப்ரமணியபுரம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ஏ.பஹ்ருதின் தலைமை வகித்தார். மாநில செயலாளர் இ.பாரூக் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். இதில், முத்தலாக் மசோதா, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் விவகாரங்களில் மத்திய அரசை கண்டிப்பது; செப்டம்பர் 28-ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற உள்ள தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கலந்து கொள்ள செய்வது; ஆகஸ்ட் 15 அன்று மயிலாடுதுறை நகர கிளைகள் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடத்துவது; மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று உடனடியாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.