வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக வீசி வரும் பலமான கடல்காற்றின் காரணமாக மீன்பிடித் தொழில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பாதிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட வேகமான கடல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. காற்றில் புழுதி மணல் கலந்து வெளியேறுவதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே, காற்றின் காரணமாக கடல் சீற்றமாக இருப்பதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு: இந்தச் சூழலில், காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் தகட்டூர் ந. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தகட்டூர் தேநீர்க் கடையில் எழுதி ஒட்டியுள்ள வானிலை அறிக்கையில், மேற்கு வங்கம், வங்க தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழக கிழக்கு கடலோரத்தில் பலத்தக் காற்று வீசி வருகிறது. இது ஆகஸ்ட் 5 முதல் 9-ஆம் தேதி வரை நீடிக்கும். காற்றின் வேகமும் படிப்படியாக அதிகரிக்கும். சுமார் 50 கிலோ மீட்டர் வேகம் வரையில் உணரப்படும். மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். வேதாரண்யம், கோடியக்கரையில் கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.